Sunday, September 30, 2007

முதியோர் இல்லம்


நிழல் தரும்
மரங்களை நாமறிவோம்..
நிழல் தர வெயிலில் நிற்கும்
மரங்களை யாரறிவார்..

நட்பும் காதலும்


உடலும் உயிரும்..
குடையும் நிழலும்..
இவர்களின் தூரத்தில்
அழகும் உறவும் இருக்கிறது..

ஒன்று -
பயணம் செய்கையில்
கூடவே வருகிறது.. (உடல்)
இன்னொன்று -
பயணம் செல்கையில்
நமக்காகவே துடிக்கிறது.. (உயிர்)

இவன்- கையகத்திலே
எனை மாட்டிக்கொள்வான்.. (குடை)
இவள்-காலடியிலே
எனை சாய்த்துக்கொள்வாள்.. (நிழல்)

ஒன்று -சுவைத்தவுடன்
நாவிலே இனித்துவிடும்..
இன்னொன்று -நாவில் மட்டும் அல்லாது
இதயம் வரை இனிக்கும்..

பிரிவில் ஒன்று -
கை கொடுத்து தோள் தட்டும்..
இன்னொன்று -
மனம் விடுத்து கண்ணீர் முட்டும்..

இருவருக்கும்
இடைவெளியும் உண்டு
இடைவேளையும் உண்டு..

தேடிக்கொள்ளும் உறவுகள் இவை..
தேயாத நிலவுகள் இவை..

அனுமதி இலவசம்..
வருவோர் வரலாம்..
கேட்போர் கேட்களாம்..

Friday, September 21, 2007

அசரிரி..

விடியல் ஞாபகத்தில்
விழித்துக்கொண்டது
இமைகள்..

காசில்லா நேரங்களில்
தந்தையின் ஞாபகம்

பசிவரும் நேரங்களில்
தாயின் ஞாபகம்..

உண்ணும் தருவாயில்
'இன்னும் கொஞ்சம்..
இன்னும் கொஞ்சம்..'
அக்காவின் ஞாபகம்

கூடத்தில் நான் மட்டும் -
தங்கையின் ஞாபகம்

சாலையோரத்தில் நடந்து சென்றேன்
கால் வலித்தது
அண்ணாவின் ஞாபகம்

உணர்வுகளுக்கிடையே
உணவு மட்டும -
இடை விட்டு..

விதியை நினைத்தபடி
இமைமூடி அமர்ந்தேன்..

"என்னடா சாப்டியா.." கேட்டவாறே
உள்ளே நுழைந்தான்
நண்பன் -
அம்மாவின் அசரிரி..

ங்கா..


போன உசுரு திரும்பி வந்துடுச்சு..
உன் உசரம் காண மனசு தேம்பி அழுதுடுச்சு..
எல்லா செல்வமும் உன் மூலமா வந்துடுச்சு..
'ம்மா'னு சொல்லிக் கேட்க மனசு ஏங்கிடுச்சு..

கொடுத்த பாரத்த உன் மூலமா தெரிஞ்சுகிட்டேன்!
கொண்ட துணியோட மாரோட அணைச்சுகிட்டேன்!
ஒத்தடமா கண்ணீர பாதத்துல தெளிச்சுவச்சேன்!
ஒத்த ரூபா காச மஞ்ச துணியில முடிஞ்சுவச்சேன்!

முட்ட கண்ணும் மொட்டு இதழும் துவளுது.. பேசுது..
வட்ட நிலவும் உன் அழக பார்த்து மயங்குது.. ஏங்குது..
கஷ்டமில்லாம கை ரெண்டையும் முறிக்குது.. சிரிக்குது..
அது இஷ்டத்துக்கு இன்னிக்கே அழுது பழகுது..

விடிஞ்சதும் நிலவும் தூங்குது நீயும் தூங்குற..
கண்ணு கொஞ்சம் அசந்தா 'ங்கா..ங்கா'னு அழுதுபுடுற..
எரும்பு கடிச்சுதா பசிக்குதான்னு தெரியாம புலம்புறேன்!.
அரும்பு தேகத்த உசுரோட சேர்த்து அணைக்குறேன்..!..

முத்தம்


இரு உதடுகள் நடத்தும்
அடையாள வேலை நிறுத்தம்!..

உதடுகள் கூட்டி
ஆசைகள் பெறுக்கி
நேரம் கழித்து - இமைகள்
வகுத்து கூறும் வாய்ப்பாடு!..

இருக்க மூடி -
இருகக் கூடி -
தவமிருக்கும் பொழுதுகள்!..

வந்த இடம் உலராது..
சேரும் இடம் தெரியாது..
முகம் புதைக்க திசைத் தேடும்
வேர்கள் போல...

கொஞ்சம் கொஞ்சும் -
இரவுகள்..
கெஞ்சிய பின் மிஞ்சும் -
உதடுகள்..

மொத்தமும் நித்தமும்
சத்தமிடாமல் -
ம்ம்..

Tuesday, September 18, 2007

பாத்திரம் அறிந்த தெய்வங்கள்


வேதங்கள் ஓதும் சத்தம் கேட்கிறது..
ஆலயமணி ஓலிக்கிறது..
தொழுகையும் ஆரம்பித்தாகிவிட்டது..
இன்னும் காணவில்லையே பக்தர்களை.?..

ஒவ்வொரு தெய்வங்களும்
பக்தர்களைத் தேடி
ஆலயங்களின் வாசலில்..

பாத்திரம் அறிந்து தன்னிடத்தை
தேர்ந்தெடுத்த தெய்வங்கள்..

நிதி நிலைமை பற்றாக்குறை -
உண்டியலுக்கு பட்டையிட்டு
பொட்டிட்டு பூவைத்தார் பூசாரி!..

பல கேள்விகளுக்கு -
பதில் அளிக்க முடியாமல்
பாய் விரித்து மரித்து போகும்
சுடுகாடு தவிர்த்த மனித உயிர்கள்..

கனவில் கூட
வரிசையில் தான்
உணவு கிடைக்கிறது...

புது காரணங்கள் கிடைக்காமல்
வழக்கம் போல் -
அதே இடத்தில்..

முதன்முறையாய்...

கூந்தலில் படியாத
ஓரிரு தலைமுடி
பின்னிழுக்கிறாய் - கேட்காமல்
முன்னே விழுகிறது...

மடியில் பூத்திருக்கும்
தாவணிப்பூக்கள்
சரி செய்துக்கொள்கிறாய்
தவறில்லை - ஆனால்
தவறல்லவா செய்யத் தூண்டுகிறாய்...

தெரியுமா? தவறு செய்யத் தூண்டுபவருக்குத்தான்
தண்டனை அதிகம் -
(என்) ஆயுள் தண்டனை...

புத்தகத்தை அணைத்தபடி
தலைக்குனிந்தபடி -
ஓர் அழகு...

ஒற்றை ஜடை
சிற்றிடை
கொஞ்சம் ... இல்லை இல்லை
கொஞ்சும்...

பின் செல்கிறது நிழல்
நானும்...
முதன்முறையாய்!

அனாதை


இந்த மலர்க்கொடியை
அறியாமல் கூட
கிள்ளிவிடாதீர்கள் -
இதற்கு வேர்கள் இல்லை!...